வீதி விபத்து உயிரிழப்புகள் அதிகரிப்பு – மது, போதைப்பொருள் ஓட்டுநர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை என பொலிஸார் எச்சரிக்கை

 


நாட்டில் வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, மது மற்றும் போதைப்பொருள் பாவனையுடன் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவோருக்கு எதிராக, இனிமேல் போக்குவரத்துச் சட்டத்திற்கு மேலதிகமாக குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புக்குப் பொறுப்பான துணைப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.ஜி.ஜே. சேனாதிர இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் கூறுகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். இதற்கான பிரதான காரணமாக மது மற்றும் போதைப்பொருள் பாவனை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வீதி விபத்துகள் 271 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை, பாரிய விபத்துக்களின் எண்ணிக்கையில் ஓரளவு குறைவு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

விபத்துகளுக்கான முக்கிய காரணமாக சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையான ஓட்டுதல் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், நாளாந்த விபத்துகளில் பாதசாரிகளே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். வருடாந்த விபத்துகளில் சுமார் 31 சதவீதம் பாதசாரிகள் தொடர்பானவையாக இருப்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளும் அதிகளவில் விபத்துகளுக்கு முகம் கொடுக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மது போதையிலும் போதைப்பொருள் பாவனையுடனும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக துணைப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

புதியது பழையவை