பருத்தித்துறையில் சுகாதார விதிகளை மீறி இயங்கிய உணவகங்களுக்கு, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர்ப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்களை, பருத்தித்துறை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் இணைந்து ஆய்வு செய்தனர்.
சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டன
இந்த ஆய்வின்போது, சுகாதாரக் குறைபாடுகளுடன் செயல்பட்ட ஆறு (06) உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக, பருத்தித்துறை நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் (19.12.2025) வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், அவர்களுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
