16 வயதிற்குட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

 


16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதித்த முதல் தேசமாக அவுஸ்திரேலியா விளங்குகிறது. அங்கு தற்போது நள்ளிரவைத் தாண்டியுள்ள நிலையில், 16 வயதுக்கு கீழுள்ள சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நடைமுறைக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவில் 16 வயது வரை உள்ள ஐந்து மில்லியன் குழந்தைகளும், 10 முதல் 15 வயதுப் பிரிவில் உள்ள ஒரு மில்லியன் குழந்தைகளும் உள்ளனர்.

சமூக ஊடகங்களின் பயன்பாடு தினந்தோறும் அதிகரித்து வருவதால், குழந்தைகளின் மன நலமும், ஆரோக்கியமும் பாதிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.

இதைக் கட்டுப்படுத்த, 'இணையப் பாதுகாப்பு திருத்தச் சட்டம்' கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தச் சட்டத்தின்படி, 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள், 'முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டாக், எக்ஸ் (ட்விட்டர்), யூடியூப், ஸ்னாப்சாட்' போன்ற சமூக ஊடகங்களில் கணக்கைத் தொடங்கவோ, பயன்படுத்தவோ இயலாது.

16 வயதுக்குட்பட்டவர்களின் சமூக ஊடகக் கணக்குகளை நீக்க, 'டிக்டாக், எக்ஸ், மெட்டா' ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட அவுஸ்திரேலிய அரசாங்கம், புதிய கணக்கு தொடங்குவோரின் வயதைச் சரிபார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் வலியுறுத்தியுள்ளது.

தடையை மீறும் நிறுவனங்களுக்கு, 297 கோடி இந்திய ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

புதியது பழையவை