நிலவிய பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் தொடர்ந்தும் தற்காலிகத் தங்குமிடங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நாடு பூராகவும் அமைந்துள்ள 762 தற்காலிகத் தங்குமிடங்களில் 22,522 குடும்பங்களைச் சேர்ந்த 70,055 நபர்கள் இதுவரை தங்கியுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான தற்காலிகத் தங்குமிடங்கள் அமைந்துள்ளன. அங்குள்ள 222 முகாம்களில் 5,427 குடும்பங்களைச் சேர்ந்த 17,437 பேர் தங்கியுள்ளனர்.
அதற்கடுத்ததாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் அதிக தற்காலிகத் தங்குமிடங்கள் அமைந்துள்ளன. நுவரெலியாவில் 206 முகாம்களில் 6,487 குடும்பங்களைச் சேர்ந்த 19,750 பேரும், பதுளை மாவட்டத்தில் 155 முகாம்களில் 6,026 குடும்பங்களைச் சேர்ந்த 19,409 பேரும் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த தற்காலிகத் தங்குமிடங்களில் உள்ள குடும்பங்களை விரைவாக மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
2-3 மாதங்களுக்குள் அக்குடும்பங்களை மீளக்குடியமர்த்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
இந்த முகாம்களில் தங்கியுள்ள சிலரின் வீடுகள் முழுமையாகவும், மேலும் சிலரின் வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியதோடு, தாம் வசித்த இடங்களில் நிலவும் அபாயகரமான நிலைமை காரணமாக மீண்டும் அவ்விடங்களில் குடியேற மற்றுமொரு தரப்பினர் விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். அதற்கமைய, அத்தரப்பினருக்கு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 3 மாத வீட்டு வாடகை கொடுப்பனவை வழங்கும் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
வீடுகள் முழுமையாக சேதமடைந்தவர்களுக்கு வீடுகளை வழங்குவதே தற்போது பெரிய சவாலாக மாறியுள்ளதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 50 இலட்சம் ரூபா பணத்தை வழங்குவதற்கான மேலதிக நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து காணிகளை வழங்குவது தொடர்பில் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அதற்காக அரச காணிகள் தொடர்பான தகவல்கள் தற்போது திரட்டப்பட்டு வருவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி மேலும் தெரிவித்தார்.