புற்றுநோய் சிகிச்சையில் தேறிவரும் பிரிட்டன் மன்னர்

 


புத்தாண்டிற்குப் பிறகு எனது புற்றுநோய்க்கான சிகிச்சை குறைக்கப்படும். மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்' என பிரிட்டன் மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்குப் பின், 2022ஆம் ஆண்டு செப்டம்பரில், பிரிட்டன் மன்னராக, அவரது மகன் மூன்றாம் சார்லஸ், 77, பட்டமேற்றார். இவருக்குச் சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சார்லசுக்கு, புற்றுநோய் கண்டறியப்பட்டது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சூழலில், புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி ஒளிபரப்பில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் பேசியதாவது: 'புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, அந்த நோயின் பாதிப்பிலிருந்து சுலபமாக மீள்வதற்கு உதவுகிறது. புத்தாண்டிற்குப் பிறகு எனது புற்றுநோய்க்கான சிகிச்சை குறைக்கப்படும்.

மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிரங்கப்படுத்துகிறேன். புற்றுநோய் தாக்கத்தை விரைவாக அறிந்து, சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வைப் பெறலாம். தொடக்கத்திலேயே புற்றுநோயைக் கண்டறிவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை நான் நேரடியாகப் பெற்றிருக்கிறேன்.

சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்ததால்தான், இன்று நான் சிகிச்சையில் இருந்தாலும்கூட சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் விளங்குகிறேன். புற்றுநோயியல் நிபுணர்கள், தாதியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்களின் தன்னலமற்ற பணிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.' இவ்வாறு மன்னர் சார்லஸ் உரையாற்றினார்.

புதியது பழையவை