சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட கடற்கரைகளை ‘க்ளீன் சிறிலங்கா’ (Clean Sri Lanka) எனும் தூய்மைத் திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் செயல்பாடு முல்லைத்தீவில் நடைபெற்றது.
அதற்கமைய, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் வழிகாட்டலின்படி, முதல் கட்டமாக முல்லைத்தீவு கடற்கரைப் பகுதி மற்றும் கொக்கிளாய் முகத்துவாரக் கடற்கரைப் பகுதி ஆகியவை இன்று (11.12.2025) துப்புரவு செய்யப்பட்டன.
முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற துப்புரவுப் பணிக்கு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமை தாங்கினார்.அதேபோல், கொக்கிளாய் முகத்துவாரக் கடற்கரை துப்புரவு செய்யும் சிரமதானப் பணியானது கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த சிரமதானப் பணியில் முல்லைத்தீவு மாவட்டச் செயலக அலுவலர்கள், கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலக ஊழியர்கள், இராணுவம், கடற்படை, காவல்துறை மற்றும் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த முயற்சிக்கு ‘Clean Sri Lanka’ செயலகம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
