நாட்டில் ஏற்பட்ட பேரிடர்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதற்கமைய அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என அனைவரும் இன்று சேவைக்கு வர வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேல், வடக்கு, கிழக்கு, சபரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் உள்ள 10,076 பாடசாலைகளில் 9,929 பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார். எவ்வாறாயினும் பேரிடரை எதிர்நோக்கிய 147 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 6 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகளும் நாளை திறக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை பேரிடர் நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் சீருடை தொடர்பில் தளர்வான கொள்கை பின்பற்றப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.
