அரிசித் தட்டுப்பாடு வராது - விவசாய அமைச்சர்

 


அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெளிவுபடுத்தினார். சில அரிசி வகைகளைப் பயிரிடும் அளவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே சில சந்தர்ப்பங்களில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது என அமைச்சர் குறிப்பிட்டார்.

வெள்ளத்தினால் சேதமடைந்த கல்நேவ பிரதேசத்தில் உள்ள வயல் நிலங்களை மீண்டும் பயிரிடும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் போகத்தில் பயிரிடப்படும் நாட்டு அரிசியைத் தவிர ஏனைய விளைச்சல்களுக்கு அதிக விலையை வழங்குவது குறித்தும் கவனஞ் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்த குறிப்பிட்டார்.

அங்கு கருத்துத் தெரிவித்த விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த, மீண்டும் உயிர்த்தெழுவது குறித்த பாரிய அனுபவம் விவசாய சமூகத்திற்கே உள்ளது. விவசாய மக்கள் இந்த அழிவின் போதும் மீண்டும் எழுவார்கள் என்பது குறித்து எவ்வித ஐயமும் இல்லை.

இந்த அழிவு ஏற்பட்டவுடன், விவசாயிகள் பயிரிடுவார்கள், அதில் சிரமமில்லை, ஆனால் விதை நெல் சிக்கல் வரக்கூடும் என்றே எமது மனதில் முதலில் தோன்றியது. ஆனால் விதை நெல் குறித்து எங்கும் பேச்சே இல்லை.

அதனால் எதிர்காலத்தில் அரிசிப் பிரச்சினை வருமென யாராவது எண்ணிக் கொண்டிருந்தால், அவ்வாறான சிக்கல் எதுவும் இல்லை. பயிரிடப்படும் அளவுகளில் உள்ள மாற்றங்கள் காரணமாக சில வகைகளை வெளிநாட்டிலிருந்து கொண்டுவர வேண்டியுள்ளது.

கடந்த நாட்களில் நாம் கீரி சம்பாவை குறிப்பிட்ட அளவு இறக்குமதி செய்தோம். கீரி சம்பா பயிரிடப்படும் அளவு குறைந்ததாலேயே அதனை இறக்குமதி செய்ய நேரிட்டதே தவிர, நாட்டில் அரிசித் தட்டுப்பாடு நிலவுவதால் அல்ல" எனத் தெரிவித்தார்.

புதியது பழையவை