வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்துக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது மேல் மற்றும் வடமேல் திசையில் நகர்ந்து, இலங்கையின் கிழக்கு கடற்கரை பகுதிகளை அணுகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீட்டரை விட அதிகமான கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், மலைநாடு, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 50 கிலோமீட்டர் வரை வேகமுள்ள பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் எந்தவொரு இயற்கை பேரிடரையும் எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும், பதுளை, மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான முதல் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.