அமெரிக்க குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்த வெனிசுவெலா ஜனாதிபதி மதுரோ

 


அமெரிக்க நீதித்துறையால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ முற்றாக நிராகரித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர், நியூயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையான போது இந்த நிலைப்பாட்டை எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

இந்த விசாரணையின் போது, வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவி செலியா புளோரஸும் சிறைச்சாலை உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த மதுரோ, தான் தற்போது வெனிசுவெலாவின் ஜனாதிபதியாக உள்ளதாகவும், எந்த குற்றத்திலும் தொடர்பற்ற நிரபராதி எனவும் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, முதல் பெண்மணி செலியா புளோரஸும், தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார்.

இருப்பினும், ஜனாதிபதி மதுரோவோ அல்லது அவரது மனைவியோ பிணை கோரிக்கை எதையும் சமர்ப்பிக்கவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இரு தரப்பினரின் வாதங்களை கேட்டறிந்த பின்னர், நீதிபதி ஆல்வின் ஹெல்லர்-ஸ்டீன், இந்த வழக்கை மார்ச் 17 ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை முன்னர் பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணி பாரி ஜோயல் பொல்லாக், நிக்கோலஸ் மதுரோவின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதனிடையே, நிக்கோலஸ் மதுரோவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் நூற்றுக்கணக்கானோர் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் கூடினர் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதியது பழையவை