மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில், மின்கம்பம் ஒன்றுடன் அம்பியூலன்ஸ் வண்டி மோதியதில் கடுமையான விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் காரணமாக, மின்கம்பங்கள் துண்டு துண்டாக உடைந்து சேதமடைந்ததுடன், அம்பியூலன்ஸ் வண்டியும் முற்றாக நாசமடைந்துள்ளது. இதன் விளைவாக, சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
விபத்தில், அம்பியூலன்ஸ் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான இந்த அம்பியூலன்ஸ் வண்டி, பாதையை விட்டு விலகி, மின்கம்பத்திலும் அருகிலிருந்த பனைமரத்திலும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட, நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான இந்த அம்பியூலன்ஸ் வண்டியின் பெறுமதி சுமார் ரூ. 1 கோடி 75 இலட்சம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக, காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.