வவுனியா விபுலானந்த கல்லூரியில் இரசாயனவியல் ஆசிரியரை நியமிக்காமல் இருப்பதற்காக, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ரூபா 10 இலட்சம் பணம் பெற்றோர் ஒருவரால் வழங்கப்பட்டதாக, ஓர் ஏழைத் தாய் தன்னிடமே தெரிவித்ததாக, தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ. திலகநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
வவுனியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார் என எமது பிராந்திய செய்தியாளர் அறிவித்துள்ளார்.
கல்வியில் ஊழலும் வீழ்ச்சியும்
அவர் மேலும் தெரிவிக்கையில், "வட மாகாணத்தில் கல்வியில் ஊழல் மலிந்துள்ளதால், வறிய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
எமது வட மாகாணம் கல்வியில் பின்தங்கிய நிலைக்குச் செல்கின்றது. உதாரணமாக, 2021 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணம் இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் ஏழாம் இடத்தில் இருந்தது. 2022 ஆம் ஆண்டிலும் அதே ஏழாம் இடத்தில் இருந்தது. ஆனால், 2023 ஆம் ஆண்டு எட்டாவது நிலைக்குத் தள்ளப்பட்டது. 2024 ஆம் ஆண்டு ஒன்பதாவது இடத்திற்குச் சென்றுவிட்டது.
இதற்குப் பலதரப்பட்ட காரணங்களை அரச அதிகாரிகள் சால்ஜாத்துகளாகக் கூறி தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால், அதன் உண்மையான காரணத்தை மாணவச் செல்வங்களின் பெற்றோர்களோ, புத்திஜீவிகளோ அறிந்துகொள்ளவில்லை.
ஓர் எழுத்தறிவைக் கற்பிக்கின்ற சமுதாயத்தில் ஊழல் என்பது எந்த வகையிலும் மன்னிக்கப்பட முடியாத ஒன்றாகும். வடக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மக்களின் எஞ்சியுள்ள ஒரே ஒரு சொத்து கல்வியே ஆகும்.
நாங்கள் கல்வியை வளர்த்தெடுக்காவிட்டால் எமது சமுதாயத்தில் எதுவுமே மிஞ்சியிருக்காது. ஆகவே, இந்த வடக்கு மாகாண கல்விச் சமுதாயத்தில் நிகழும் ஊழல் தொடர்பாக நான் இங்கு வெளிப்படுத்த விரும்புகின்றேன்.
ஏழைத் தாயின் அதிர்ச்சித் தகவல்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் நான் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு ஏழைத் தாய் என்னை வழிமறித்துச் சொன்னார்.
அவர், தன்னுடைய மகள் பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி பயின்று கொண்டிருப்பதாகவும், அந்தக் கல்லூரியில் புதிய உயர் தர வகுப்பு ஆரம்பித்து நான்கு மாதங்கள் முடிவடைந்தும் இதுவரையில் இரசாயனவியல் பாடத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
அதற்கான காரணத்தை அவர் விளக்கியபோது எனக்கு இதயமே நின்றுவிடும்போல் இருந்தது. உயர் தரப் பரீட்சை என்பது ஒரு போட்டித் தேர்வு ஆகும். சாதாரண வறிய மாணவர்கள் கல்வி கற்கும் ஒரே இடம் பாடசாலையே ஆகும்.
அந்தப் பாடசாலையில் திறமையான ஏழை மாணவர்கள் பலர் கல்வி கற்கிறார்கள். அவர்கள் அந்தப் போட்டித் தேர்வில் சித்தி அடையாமல் செய்வதற்காக, சில வசதி படைத்த பெற்றோர் பணம் கொடுத்திருக்கிறார்கள்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு, அதாவது வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஒரு மாணவியின் தந்தை ரூபா 10 இலட்சம் கொடுத்திருக்கிறார்.
'அதனால் முதலாம் தவணைக்கு ஒருபோதும் இரசாயனவியல் பாடத்திற்கு ஆசிரியர் வரமாட்டார்' என்று சொன்னார். அப்போதுதான் நான் சிந்தித்தேன்.
கடந்த நான்கு ஐந்து மாதங்களாக இந்தப் பாடசாலையில் இரசாயனவியல் பாடத்திற்கு ஆசிரியர் இல்லை. அதற்கு ஒரு மாற்று உதாரணத்தையும் நான் குறிப்பிட்டிருந்தேன்.
மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயல்
செட்டிக்குளத்தில் இருக்கின்ற அல்ஹாமியா என்னும் பாடசாலையில் ஒரே ஒரு மாணவர்தான் இருக்கின்றார். அங்கே ஒரு இரசாயனவியல் ஆசிரியர் இருக்கிறார்.
ஆனால் இந்தப் பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் 75 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். அந்தப் பாடசாலைக்கு ஆசிரியரை நியமிக்காததற்கான காரணம், அந்த ஏழைத் தாய் கூறிய அதே காரணத்தை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது.
அது தொடர்பாக அந்த ஏழைத் தாய் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளரிடம் நான் தொலைபேசியில் விசாரித்தபோது, அவர் 'கல்வி அமைச்சின் செயலாளர்தான் அதை நியமிப்பது. அது அவருடைய கடமை; மிக விரைவில் அந்த வெற்றிடம் நிரப்பப்படும்' என்றார்.
ஆனால், நான் உறுதியாக ஊகித்துக்கொண்டேன். முதலாவது தவணை மிக விரைவில் முடிவடைந்துவிட்டது. நான் எண்ணுகிறேன், இரண்டாவது தவணைக்கும் அந்த வசதி படைத்த மாணவியின் தந்தை ஒரு மில்லியன் ரூபாய் வழங்கினால், இரண்டாவது தவணைக்கும் அங்கே ஆசிரியர் நியமிக்கப்பட மாட்டார்.
ஆகவே அதிகாரிகளே, சிந்தியுங்கள். ஏழைகளின் செல்வம் கல்வி. பெண்களுக்குப் பாதுகாப்பு கல்வி. வசதி படைத்தோரின் அணிகலன் தான் கல்வி. ஆகவே, ஏழைகளின் செல்வத்தில் விளையாடாதீர்கள். எமது அரசாங்கத்தில் தற்போது இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இங்கே இருக்கின்ற அரச அதிகாரிகளை விடத் திறமையான அறிவுள்ளவர்கள் தான் இருக்கின்றார்கள்.
ஆகவே, எமது ஜனாதிபதியினுடைய எண்ணக்கருவைச் செயல்படுத்துவதற்கு ஒருபோதும் நாங்கள் தயங்க மாட்டோம். ஏழை மாணவர்களுடைய வாழ்க்கையில் விளையாடாதீர்கள்.
உண்மையிலேயே நான் கவனித்தபோது, அதாவது உயர் தரம் உயிரியல், கணிதப் பிரிவுகளில் பயில்கின்ற மாணவர்களுக்கு ஏதோ ஒரு பாட ஆசிரியரை திட்டமிட்டு வழங்காமல் விடுவதனால், உயர் தரப் பரீட்சையில் கடந்த காலங்களில் மூன்று பாடத்தில் ஒரு பாடம் அவர்கள் தேர்ச்சி அடையாமல் இருக்கிறார்கள்.
இதனால் அந்த மாணவர்கள் எதிர்காலத்தில் எந்த ஒரு போட்டிப் பரீட்சையிலோ அல்லது அரச உத்தியோகத்திலோ இணைவதற்கான வாய்ப்புக்களை இழக்கிறார்கள்.
ஆகவே, அன்பான அரச உத்தியோகத்தர்களே, நீங்கள் கடந்த காலத்தில் தவறு செய்திருக்கலாம். பணத்தின் மீது ஆசைப்பட்டிருக்கலாம். நீங்கள் வேறு எங்கே வேண்டுமானாலும் தவறு செய்யுங்கள்.
ஆனால், கல்வியில் தவறு செய்ய வேண்டாம் என்று பணிவுடனும் அன்போடும் உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். இவ்வளவு காலம் நீங்கள் தவறு செய்திருந்தால், இன்றில் இருந்தாவது நீங்கள் திருந்தி, இந்த நாட்டுக்கும் எங்களுடைய சமுதாயத்திற்கும், ஏழை மக்களின் வரிப் பணத்திலிருந்து பெற்றுக் கொள்கின்ற சம்பளத்திற்கு நேர்மையாகக் கடமையாற்றுங்கள் என்று நான் இந்தத் தருணத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்” என அவர் முடித்துக்கொண்டார்.