ஆஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்துத் துப்பாக்கிச் சூடு: சிட்னியில் 11 பேர் பலி


 ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி நகரின் போண்டி கடற்கரையில் (Bondi Beach) நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயமடைந்துள்ள நிலையில், ஒரு குழந்தை உட்பட 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தத் தகவலை நியூ சௌத் வேல்ஸ் காவல்துறைத் தலைவர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்ததாகச் சிட்னிக்கான பிபிசி செய்தியாளர் டிஃபனி டர்ன்புல் அறிக்கை அளித்துள்ளார். பொது இடத்தில் இரண்டு ஆண்கள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக" நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை தனது 'எக்ஸ்' (X) சமூக ஊடகப் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் எம். லேன்யனின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியக் கிழக்கு பகல் நேரப்படி மாலை 6:47 மணியளவில் போண்டி கடற்கரையில் அமைந்துள்ள ஆர்ச்சர் பூங்காவுக்கு அருகில் நிகழ்ந்தது.

யூதப் பண்டிகைக் கொண்டாட்டம் இலக்கு வைக்கப்பட்டதா?

பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா வோங்கின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் போண்டி கடற்கரையின் வடக்குப் பகுதியில் உள்ள மிகவும் மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் நடந்தது.

"கடற்கரைக்குப் பின்னாலுள்ள புல்வெளிப் பகுதிக்கு அருகில் ஹனுக்கா என்ற யூதர்களின் பண்டிகைக் கொண்டாட்டம் நடந்துகொண்டிருந்தது. கடற்கரைக்குச் செல்ல மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு நடைபாதை இருந்தது. துப்பாக்கிதாரிகள் அதை இலக்காகப் பயன்படுத்தியிருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.

"துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு நான் அந்தப் பாலத்தைக் கடந்தபோது அங்கு குறைந்தது 200 பேர் திரண்டிருந்ததையும், இசை உரக்க ஒலித்துக்கொண்டிருந்ததையும், பல்வேறு நிகழ்வுகள் நடந்துகொண்டிருப்பதையும் பார்த்தேன். தாக்குதல் நடத்தியவர்கள் இந்த உயரமான பகுதியைப் பயன்படுத்தித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தோன்றுகிறது" என்று டெஸ்ஸா வோங் மேலும் கூறினார்.

"நிகழ்ச்சி நடைபெற்ற இடம் முழுவதும் உலோகத் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. மக்கள் உள்ளேயும் வெளியேயும் செல்வதற்கான ஒரு நுழைவாயில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் குறைவாகவே இருந்தன" என்றும் அவர் விளக்கினார்.

தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவர் உயிரிழந்துவிட்டார், மற்றொருவர் காவல்துறையினரின் காவலில் உள்ளார்" என்று பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா வோங் கூறினார்.

இந்தத் தாக்குதல் "சிட்னியின் யூத சமூகத்தைக் குறிவைத்து திட்டமிடப்பட்டது" என்று நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை தலைவர் கிறிஸ் மின்ஸ் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

"இந்தத் தாக்குதல் சிட்னியின் யூத சமூகத்தைக் குறிவைத்து திட்டமிடப்பட்டது. அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஓர் இரவு, ஒரு பயங்கரமான கொடூரத் தாக்குதலால் சிதைக்கப்பட்டுவிட்டது," என்று சிட்னி காவல்துறைத் தலைவர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்தார்.

யூதர்களின் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாட அங்கு வந்திருந்த சுமார் ஆயிரம் பேர் அந்த இடத்தில் இருந்ததாக நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் எம். லேன்யன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் குறைந்தது 11 பேர் இறந்ததாகவும், 29 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

இவர்களில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸி இந்தச் சம்பவத்தை "அதிர்ச்சியூட்டுவது, ஆழ்ந்த கவலையளிப்பது" என்று விவரித்தார்.

இந்தச் சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், அவர்களுடைய காயங்களின் அளவு மற்றும் அவர்களின் தற்போதைய நிலை வெளியிடப்படவில்லை.

நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை தற்போது அந்தப் பகுதியில் வெடிபொருட்களைக் கண்டுபிடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்தப் பகுதிக்குச் செல்வததைத் தவிர்க்கவும், சரிபார்க்கப்படாத செய்திகளைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறை மக்களை வலியுறுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் யூத விடுமுறை நாளான கடற்கரையில் நடைபெறும் ஹனுக்கா பண்டிகையுடன் தொடர்புடையதா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

நேரில் கண்ட சாட்சிகள் சொன்னது என்ன?

துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது தனது குழந்தைகளுடன் கடற்கரையில் நடந்த ஹனுக்கா நிகழ்வில் இருந்ததாக, சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, தான் தனது குழந்தைகளுடன் அங்கிருந்து ஓடிவிட்டதாக அவர் கூறினார். "நான் வழக்கமாக வேலைக்குப் பிறகு செய்வது போல் இன்று மதியம் கடற்கரையில் இருந்தேன், அப்போது தொடர்ச்சியான பலத்த வெடிச்சத்தங்களைக் கேட்டேன். சுமார் 20 பேர் இருந்ததாக நினைக்கிறேன்."

"ஆரம்பத்தில் வெடிச்சத்தங்களை யாரும் வித்தியாசமாக நினைக்கவில்லை. பட்டாசுகள் வெடிப்பது போலத் தோன்றியது. ஆனால் நாங்கள் இருந்த இடத்திற்கு வடக்கே உள்ள தமராமா, போண்டி ஆகிய இரண்டு கடற்கரைகள் மீது ஹெலிகாப்டர்கள் வட்டமிடுவதைக் கண்டபோது, ​​ஏதோ தவறு இருப்பதாக எங்களுக்குத் தெரிந்தது. பிறகு, துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகள் தொடர்ந்து வரத் தொடங்கின," என்று அவர் கூறினார்.

சம்பவத்தை நேரில் கண்ட மற்றொரு சாட்சியான மார்கோஸ் கார்வால்ஹோ, "துப்பாக்கிச் சத்தம் பட்டாசு சத்தம் போல் இருந்தது. போண்டியில் இப்படியொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை" என்றார்.

"கடற்கரையில் இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பது புரிந்தவுடன், ஓடத் தொடங்கினர். நான் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வடக்கு போண்டியில் உள்ள புல்வெளியை நோக்கி ஓடினேன்."

பின்னர் தானும் வேறு சிலரும் ஒரு ஐஸ்கிரீம் வேனின் பின்னால் ஒளிந்து கொண்டதாக கார்வால்ஹோ கூறினார்.

அவசர சேவைகள் வந்து துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்ட பிறகு, கார்வால்ஹோ வீட்டிற்குச் செல்லும் வழியில், ​​"தரையில் சடலங்கள் கிடப்பதை" கண்டதாகக் குறிப்பிட்டார்.

யூதர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்'

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடந்த சம்பவத்திற்கு எதிர்வினையாற்றிய இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக், இது "யூதர்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்" என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலிய அதிபர் ஹெர்சாக் தனது எக்ஸ் பக்கத்தில், "சிட்னியில் உள்ள எங்கள் யூத சகோதர, சகோதரிகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், அவர்கள் முதல் ஹனுக்கா மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கச் சென்றபோது பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டனர்."

இந்த பயங்கரமான நேரத்தில் சிட்னியின் யூத சமூகம் மற்றும் முழு ஆஸ்திரேலிய யூத சமூகத்தினருக்காகப் பிரார்த்திக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

யூத எதிர்ப்பு வெறுப்புச் செயல்

ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸி ஒரு செய்தியாளர் கூட்டத்தில், போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டை ஆஸ்திரேலியர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று விவரித்தார். அதுவொரு 'மகிழ்ச்சியான நாளாக' இருந்திருக்க வேண்டிய நாள் என்று அவர் கூறினார்.

"இது யூத-விரோத வெறுப்புச் செயல்" என்று கூறிய அல்பனீஸி ,"இது நமது நாட்டின் இதயத்தைத் தாக்கும் பயங்கரவாதத் தாக்குதல்" என்று தெரிவித்தார். 

யூத உயிர்களைக் காப்பாற்ற வலுவான நடவடிக்கை எடுங்கள்

இந்தத் தாக்குதலை ஆஸ்திரேலியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

"போண்டி கடற்கரையில் நடந்த ஹனுக்கா கொண்டாட்டத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளோம். ஆஸ்திரேலியாவில் உள்ள யூத சமூகத்தினருடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன. தீபத் திருவிழாவான ஹனுக்கா, இன்று நம்ப முடியாத அளவுக்கு இருள் சூழந்துள்ளது" என்று இஸ்ரேலிய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

"வெறுமனே ஒற்றுமையை வெளிப்படுத்துவது போதாது. ஆஸ்திரேலிய அரசாங்கம் யூத எதிர்ப்பு வன்முறையில் இருந்து யூத உயிர்களைப் பாதுகாக்க உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

"தற்போது இஸ்ரேலில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கான இஸ்ரேலிய தூதர் மைமோன், இந்தப் பேரழிவு தரும் செய்தியைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா திரும்புகிறார்."

புதியது பழையவை