யாழ்ப்பாணத்தில் ரூபா 25,000 உதவித்தொகைக்கு தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், அல்லது தகுதியற்ற ஒருவருக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் பொறுப்பேற்க கடமைப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்களுக்கு நேற்று (06.12.2025) அனுப்பிய கடிதத்தில் அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யாழ்ப்பாண மாவட்டம் 2025.11.21 ஆம் திகதி முதல் ஏற்பட்ட பரவலான பேரிடர் பாதிப்பின் காரணமாக சேதமடைந்த வீடுகளைச் சரிசெய்ய ரூபா 25,000.00 உதவித்தொகை வழங்குதல் தொடர்பாக, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினுடைய NDRSC/02/04/10 ஆம் இலக்க 2025.12.02 ஆம் திகதிய கடிதத்தின்படி, விடயம் 02 இல் குறிப்பிடப்பட்டுள்ள பேரழிவுச் சூழலினால் பாதிக்கப்பட்ட வீட்டை வசிப்பதற்கு ஏற்றதாக மாற்றுவதற்கும், துப்பரவுப் பணிகளை மேற்கொள்வதற்கும், வீட்டு உபகரணங்களை சரிசெய்வதற்கும், சமூக பொருளாதார அதிர்ச்சியை நிர்வகிப்பதற்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் ரூபா 25,000.00 உதவித்தொகையை உடனடியாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினுடைய NDRSC/02/04/10 ஆம் இலக்க 2025.12.05 ஆம் திகதிய கடிதத்தில் விடயம் 01 இல் குறிப்பிடப்பட்ட, 2025.11.21 ஆம் திகதி முதல் ஏற்பட்ட பேரிடர் காரணமாக முழுமையாக சேதமடைந்த வீடுகள், ஓரளவு சேதமடைந்த வீடுகள், வீடுகளுக்கு சேதம் ஏற்படாவிட்டாலும் சிறிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், ஆகியன இந்த ரூபா 25,000.00 உதவித்தொகையைப் பெறுவதற்கு தகுதியானவை என்ற விடயம் தொடர்பிலும் தங்களது கவனம் கோரப்படுகிறது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 25,000.00 கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக, மேற்குறித்த இரண்டு கடிதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தங்களது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தருக்கு சரியான விளக்கத்தை வழங்குவது தங்களது கடமையாகும்.
இவ்வாறான வெள்ள அனர்த்த நிலைமைகளின்போது அனைத்து கிராம மட்ட உழியர்களும் நேரடியாகப் பிரிவிற்குச் சென்று தகவல்களைப் பெற்றுக்கொள்வதை தாங்கள் உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் 2025.12.05 ஆம் திகதிய கடிதத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தை சரியாகப் பூர்த்தி செய்து உறுதிப்படுத்திய வகையில் மேற்படி கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவு நிவாரணம் மற்றும் ரூபா 25,000.00 கொடுப்பனவிற்கு தகுதியான ஒருவர் மறுக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவருக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் விடை கூற கடமைப்பட்டிருப்பதால் இவ்விடயங்களில் தனிப்பட்ட கவனம் செலுத்தி செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
எனவே உலர் உணவு நிவாரணம் மற்றும் ரூபா 25,000.00 கொடுப்பனவு தொடர்பில் உரிய அறிவுறுத்தல்களுக்கமைய செயல்படுவதுடன், குறித்த அலுவலர்களை அழைத்து சரியான தெளிவூட்டலை வழங்கி, ரூபா 25,000.00 கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலை புதுப்பித்து உறுதிசெய்து, கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் தமிழ் மொழியில் காட்சிப்படுத்தி, அதன் மென்பிரதியை (Soft copy) மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
மேற்படி வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்பில் தாங்களும் தங்கள் உழியர்களும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் சேவைகளைப் பாராட்டுகின்றேன்," என்றார்.
