போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட ‘நாடே ஒன்றாக’ தேசிய விசேட வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில், போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 47,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நேற்று வரை முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனைகளில், மொத்தமாக 47,703 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளின் போது சந்தேக நபர்களிடமிருந்து கணிசமான அளவில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை வருமாறு:
ஹெரோயின் – 276 கிலோகிராம் 374 கிராம்
ஐஸ் (மெத்தாம்பெட்டமைன்) – 1,002 கிலோகிராம் 923 கிராம்
கஞ்சா – 1,411 கிலோகிராம் 936 கிராம்
இதற்கு மேலாக, ஹஷிஷ் உள்ளிட்ட பல்வேறு வகையான சட்டவிரோத போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 1,081 பேரை மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 1,130 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு திட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், 47 பேருக்கு எதிராக சட்டவிரோத சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.