முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட 20 துப்பாக்கிகள் தொடர்பில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவருக்கு 15 T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 9 மில்லிமீட்டர் ரக 5 துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 1,500-க்கும் அதிகமான T-56 ரக தோட்டாக்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட 9 மில்லிமீட்டர் தோட்டாக்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு, இராணுவத்தினரால் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு குறித்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, CID-யால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 3 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நேற்று (27) நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த உத்தரவு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாக்குமூலம் வழங்குவதற்காக CID-க்கு நேற்று முன்தினம் (26) முன்னாள் அமைச்சர் சென்றிருந்த போது அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், 2001 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்றான கைத்துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு வெலிவேரிய பகுதியில் கால்வாயை அண்டிய காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட மாகந்துரே மதூஷ் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட CID ஆட்கொலை விசாரணைப் பிரிவின் விரிவான விசாரணையின் பின்னரே டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
