படகு வழங்கலில் முறைகேடு குற்றச்சாட்டு: வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன் கடற்தொழிலாளர்கள் போராட்டம்



 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட சங்க உறுப்பினர்கள், படகு வழங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை கண்டித்து, இன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தினால், வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசத்திற்குட்பட்ட அனைத்து துணைச் சங்கங்களுக்கும் வெளி இணைப்பு இயந்திரத்துடன் தலா இரண்டு படகுகள் இலவசமாக வழங்கப்பட்டிருந்தன. குறித்த படகுகள், சமாச நிர்வாகத்தினருடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் தெரிவு செய்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்தப் படகு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக, அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கிலுள்ள பல சங்கங்களின் பிரதிநிதிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, நாகர்கோவில் மேற்கு பகுதி மக்கள் இன்று பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு படகுகள் தொடர்பில் கடுமையான முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும், இதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.

அவர்கள் மேலும் கூறுகையில், குறித்த இரு படகுகளும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு, அதன் பெறுமதியான சுமார் 18 இலட்சம் ரூபா தொகை, சங்க உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படாமல், சிலருக்கு மட்டும் பக்கச்சார்பாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இது திட்டமிட்ட மோசடி எனவும், இதற்கு சமாச நிர்வாகமும் உடந்தையாக இருந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மீள் குடியேற்றத்திற்குப் பிறகு இதுவரை எந்தவித நன்மைகளும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட படகுகளை விற்று அதன் தொகையை ஒரு சிலருக்கு மட்டும் வழங்கிய செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சமாசத் தலைவரை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது, போராட்ட இடத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும், சந்திக்க விரும்பினால் சமாச அலுவலகத்திற்கு வருமாறு தெரிவித்ததாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.

புதியது பழையவை