மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள், நேற்று இடம்பெற்ற தாக்குதல் முயற்சியை கண்டித்து, இன்று (30) காலை 9.30 மணி முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததுடன், இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
நேற்று (29) காலை, மன்னார் நகர பிரதேச செயலகத்தில் புதுக்குடியிருப்பு கிராம அலுவலர் தனது அரச கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, பிரதேச செயலகத்திற்குள் நுழைந்த நபர்கள் குழு ஒன்று குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவமதித்ததோடு, அவரது கடமை நிறைவேற்றத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
பெண் உத்தியோகத்தரான அவரது கௌரவத்திற்கும் இந்தச் சம்பவம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கிராம அலுவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்து, கிராம அலுவலர்களும் மன்னார் நகர பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இன்று காலை 9.30 மணியளவில், மன்னார் நகர பிரதேச செயலகத்திற்கு முன்பாக கிராம அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஒன்று கூடி, கருப்பு பட்டி அணிந்து, பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், எதிர்காலத்தில் கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்படாத சிலர் கூட நிவாரணம் கோரி தங்களை அச்சுறுத்தும் நிலை காணப்படுவதாகவும், அரச சுற்றறிக்கைகளின் அடிப்படையிலேயே பல்வேறு இடர்களுக்கு மத்தியில் தமது கடமைகளை மேற்கொண்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம அலுவலர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில், குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முயன்றவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், கிராம அலுவலர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என்றும், ஸ்ரீலங்கா ஐக்கிய கிராம அலுவலர் சங்கத்தின் மன்னார் நகர பிரதேச கிளைத் தலைவர் கமலேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.