முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,389 பேருக்கு குடியிருப்பதற்கான காணிகள் இல்லையென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, காணியற்ற குடும்பங்களுக்கு விரைந்து காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் காணிக்கச்சேரிகள் நடத்தப்பட்டு, காணியற்றோருக்கு காணிகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (24) நடைபெற்றதுடன், அந்தக் கூட்டத்திலேயே இவ்விடயம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,389 குடும்பங்கள் காணியின்றி வாழ்ந்து வருகின்றன என்றும், குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1,500 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காணியற்ற குடும்பங்களுக்கு கூடிய விரைவில் காணிகள் வழங்கப்படும் என பிரதேச செயலாளர் உறுதியளித்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், மாந்தை கிழக்கு, துணுக்காய் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும், காணியற்றோருக்கான காணி விநியோகத்தை வலியுறுத்தியிருந்ததாகவும், அதனடிப்படையில் அந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள காணியற்ற குடும்பங்களுக்கு விரைவில் காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியின்றி இருப்பதாக பிரதேச செயலகத் தரவுகள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, காணிகளுக்காக விண்ணப்பித்துள்ள மக்களுக்கு விரைந்து காணிகளை வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இதனைச் செய்யத் தவறினால், காணியற்ற மக்களுடன் இணைந்து பிரதேச செயலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைமுறையில் உள்ளதாக தெரிவித்தார்.
அதற்கமைய, காணியற்றோருக்கு வழங்கப்படவுள்ள காணிகள் ஏற்கனவே இனங்காணப்பட்டு, அவை அளவீடு செய்யப்பட்டு வழங்கத் தயாரான நிலையில் உள்ளதாகவும் கூறினார்.
எனவே, காணியற்றவர்களின் பட்டியலை ஆய்வு செய்து, எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் காணிக்கச்சேரி நடத்தப்படும் என அவர் உறுதிப்படுத்தினார்.
