பல சேவைகள் அத்தியாவசிய பொதுச் சேவைகளாக அறிவிப்பு: ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

 


மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகள் உட்பட, பல்வேறு முக்கிய சேவைகளை அத்தியாவசிய பொதுச் சேவைகளாகப் பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, மின்சார விநியோகம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகள், எரிபொருள் மற்றும் பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் விதிகளுக்கு அமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனைகள், பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் நோயாளர்களை பராமரித்தல், அனுமதித்தல், பாதுகாப்பு வழங்குதல், உணவளித்தல் மற்றும் சிகிச்சையளித்தல் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு மேலாக, நோயாளர் காவு வண்டி சேவைகள், பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்கான பொது போக்குவரத்து சேவைகள், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும் இந்த அறிவிப்பின் கீழ் அடங்குகின்றன.

அத்துடன், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான சேவைகள், அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் களமட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் கீழ் செயல்படும் நீர் வழங்கல், மின்சாரம், கழிவுநீர் அகற்றும் முறைமை, தீயணைப்பு, கழிவு சுத்திகரிப்பு மற்றும் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

புதியது பழையவை