யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி தற்போது மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி காரணமாக கட்டுமான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இடையூறு காரணமாக, 2026 ஜனவரி 14ஆம் திகதி நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்தப் போட்டி உள்ளிட்ட திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை–இந்தியா இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்ததன் பின்னர் குறித்த பரீட்சார்த்தப் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மைதானத்தின் கட்டுமானப் பணிகளை திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் 48 ஏக்கர் பரப்பளவில், 10 மத்திய ஆடுகளங்களுடன் அமைக்கப்படவுள்ளதுடன், மைதான எல்லை தூரம் 80 மீட்டர் வரை விரிவடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணத்தில் 138 ஏக்கர் பரப்பளவில் ஒரு விளையாட்டு நகரத்தை உருவாக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த மைதானம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
வட மாகாணத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதில் இந்த முயற்சி முக்கியமான மைல்கல்லாக அமையும் என்பதுடன், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தேசிய பாதை வேலைத்திட்டத்திற்கும் இது கூடுதல் வலுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.