வவுனியா – சமணங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணிகளை தொல்பொருள் திணைக்களம் முன்னெடுத்து வருவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான நடவடிக்கைகளை தொல்பொருள் திணைக்களம் தடுத்து வந்ததுடன், அந்த இடம் தொல்பொருள் பிரதேசம் என அறிவித்து பெயர்ப்பலகையும் நிறுவியிருந்தது. மேலும், ஆலயத்தில் பூசை மற்றும் வழிபாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு, புனரமைப்பு அல்லது கட்டுமான பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், ஊர்மக்களின் தொடர் முயற்சியின் காரணமாக, கடந்த ஆட்சிக் காலத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சின் அனுமதி பெற்ற பின், பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திய தொல்பொருள் திணைக்களம், முன்பிருந்த எண்கோண மண்டபத்தை புனரமைப்பதாகக் கூறி, அதே இடத்தில் தற்போது விகாரை அமைக்கும் பணியை முன்னெடுத்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கிடையில், குறித்த எண்கோண மண்டபம் அமைந்திருந்த பகுதியில் இருந்து கடந்த காலங்களில் எண்கோண வடிவிலான சிவலிங்கம் ஒன்று மீட்கப்பட்டு, அது எல்லப்பமருதன்குளம் குளக்கட்டு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், தற்போது அப்பகுதியில் கோவில் கொண்டு எழுந்தருளி இருப்பதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே இடத்திலேயே தற்போது விகாரை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது வரலாற்று மற்றும் மத ரீதியான ஆய்வுகளை அவமதிக்கும் செயல் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், இதேபோன்ற எண்கோண வடிவிலான சிவலிங்கங்கள் கிளிநொச்சி குருந்தூர்மலை மற்றும் இந்தியாவின் கும்பகோணம் பகுதிகளிலும் தொல்பொருள் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டுள்ளதாக தொல்பொருளாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சமணங்குளம் பகுதியில் காணப்பட்ட எண்கோண வடிவிலான சிவலிங்கம், புராதன காலங்களில் அந்த எண்கோண மண்டபத்தில் வைத்து வழிபடப்பட்டிருக்கலாம் என்பதையும், அதனை அடிப்படையாகக் கொண்டு மேலதிக வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இவ்வாறான பின்னணியில், குறித்த இடத்தில் விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.