கண்டி - கொழும்பு ரயில் பயணிகளுக்கு மாற்றுப் போக்குவரத்து

 


கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் ரயில் பயணிகளின் வசதிக்காக, இன்று(8) காலை விசேட பேருந்துச் சேவைகள் இயங்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அறிவித்துள்ளது.

 மாதாந்த சீட்டுப் பயன்பாடு

இந்தப் பிரத்தியேக பேருந்துச் சேவைகளில், பயணிகள் தங்களுடைய மாதாந்த ரயில் பருவச் சீட்டுகளைப் (Season Tickets) பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, செல்லுபடியாகும் ரயில் பருவச் சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகளுக்காக, அதிகாலை 4:00, 4:15 மற்றும் 4:30 மணிக்கு பிரத்தியேகமாகப் பேருந்துகள் இயக்கப்படும்.

திட்டமிடப்பட்டுள்ள சேவைகள் போதாமையாக இருக்கும் பட்சத்தில், கூடுதலாகப் பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 பொதுப் போக்குவரத்துச் சேவை மீள ஆரம்பம்

இதேவேளை, கொழும்புக்கும் கண்டிக்கும் இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் நாளை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரப் பேருந்துகள் பயணிப்பதற்கான தெரிவு செய்யப்பட்ட வழித்தடங்களாக, கண்டி, கட்டுகஸ்தோட்டை, கலகெதர, ஹதரலியத்த, ரம்புக்கன, கரண்டுபன, கேகாலை மற்றும் பஸ்யால வழியாக கொழும்புக்குச் செல்லும் பாதைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

நீண்ட தூரப் பயணிகள் பாதுகாப்பாகப் பயணிக்க இந்தப் பாதைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் விளக்கம் அளித்துள்ளது.

புதியது பழையவை