சிட்னி: துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதியை வெறும் கைகளால் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் உண்மையான நாயகர் என அந்நாட்டுப் பிரதமர் புகழாரம் சூட்டினார்.
ஆஸ்திரேலியாவின் பாண்டாய் கடற்கரையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். யூதர்களுக்கு எதிரான இந்தத் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை - மகன் என்பது தெரிய வந்துள்ளது. பாண்டாய் கடற்கரையில் தீவிரவாதி ஒருவர் மக்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தபோது, ஒருவர் பின்னால் இருந்து துணிச்சலாக மடக்கிப் பிடித்தார்.
அவர் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தாமல் வெறும் கைகளால் தீவிரவாதியைத் தாக்கி, அவனிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அவரது அசாதாரணத் தைரியத்தைப் பாராட்ட வைத்துள்ளது. அவர் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வர்த்தக வளாகம் நடத்தி வரும் 40 வயதான அல் அஹமது என்று தெரியவந்துள்ளது. மத்திய கிழக்கு நாடான சிரியாவைச் சேர்ந்த அவரது குடும்பம் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபுகுந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல்-அஹமதுவை நேரில் சந்தித்த ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நலம் விசாரித்தார். இது தொடர்பாக, அவர் சமூக ஊடகத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கூறியிருப்பதாவது:
"அஹமது, நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய ஹீரோ. சிட்னி கடற்கரையில் மக்களைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து தீவிரவாதியிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்து, அவனைச் சரணடைய வைத்த உங்களுக்கு, ஒவ்வொரு ஆஸ்திரேலிய மக்கள் சார்பாகவும் நான் நன்றி கூறுகிறேன்" இவ்வாறு அந்தோனி அல்பானீஸ் கூறியுள்ளார்.
