யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளரால் ஒவ்வொரு பிரதேச செயலகம் ரீதியான நிலப் பயன்பாட்டு விடயங்களும் பரிசீலிக்கப்பட்டு, பின்வரும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதோடு, பின்வரும் முடிவுகளும் எடுக்கப்பட்டன:
மாவட்ட நிலப் பயன்பாட்டுக் குழுவினால் வழங்கப்பட்ட அரச காணிகள், வழங்கப்பட்ட திகதியிலிருந்து 06 மாத காலத்திலிருந்து ஒரு வருடம் வரையில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்தால், அக்காணிகளுக்கு அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறும் மாவட்டச் செயலாளரினால் வலியுறுத்தப்பட்டது.
நிலங்கள் தொடர்பாக பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டுக் குழுவில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, அங்கு ஒப்புதலைப் பெற்ற பின்னர், பிரதேச மட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்று, அதன் பின்னரே மாவட்ட நிலப் பயன்பாட்டுக் குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
வன வளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதும் வெவ்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் காணிகளை விடுவித்தல் குறித்துத் தீர்மானம் எடுப்பதற்கு தொடர்புடைய அமைச்சுக்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாகவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் பிரிவுகளில் அரச நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்குக் காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டது.
அரச காணிகளைப் பொதுமக்களுக்கு அல்லது பொதுத்தேவைகளுக்காக அத்தியாவசியத் தேவைக்கான நிலங்களை மட்டும் வழங்குமாறு மாவட்டச் செயலாளர் கூறியதுடன், அவசியமற்ற விடயங்களுக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறும், முறையாகச் சரிபார்க்கப்பட்ட பின்னரே தீர்மானங்களை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமிடல் உதவிப்பணிப்பாளர், கடற்றொழில் திணைக்கள அதிகாரி, கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன பொறியியலாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர், மாகாண காணி ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், விவசாயத் திணைக்கள அதிகாரிகள், நில அளவைகள் திணைக்கள அதிகாரிகள், கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் உட்படப் பல அதிகாரிகள் பங்கேற்றனர்.