இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க சீனா தயாராக உள்ளது – கம்யூனிஸ்ட் கட்சி குழு செயலாளர்

 


எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்க சீனா தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கும் எனவும், ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ் சீனாவுக்கு உள்ள அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழு உறுப்பினரும், Xizang தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழு செயலாளருமான Wang Junzheng தெரிவித்துள்ளார்.

சீனத் தூதுக் குழுவுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள Wang Junzheng, நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட காலத்தில் சீனா இலங்கைக்கு வழங்கிய அவசர மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். கடினமான நேரத்தில் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட ஆதரவு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் கூறினார்.

மேலும், மக்களின் அன்றாட வாழ்க்கையை மீட்டெடுத்து நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ திட்டம் குறித்தும் சீனக் குழுவிற்கு ஜனாதிபதி விளக்கமளித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் மேற்கொண்ட சீன விஜயத்தின் போது இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையே உருவான பரஸ்பர புரிந்துணர்வையும் நட்பையும் மேலும் வலுப்படுத்தி, சீனா இலங்கையுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என Wang Junzheng உறுதியளித்தார். ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களை தொடர்வதுடன், புதிய அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க சீனா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், Clean Sri Lanka திட்டம் மற்றும் இலஞ்சம்-ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற அரசாங்கத்தின் முக்கிய முயற்சிகளுக்கு சீனா ஆதரவு வழங்கும் என்றும், குறிப்பாக கிராமிய வறுமை ஒழிப்பு தொடர்பான சீனாவின் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேசத் துறையின் தென்கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியக பணிப்பாளர் நாயகம் Peng Xiubin, பிராந்திய வெளியுறவு அலுவலக பணிப்பாளர் நாயகம் Bao Ting, பிரதிப் பணிப்பாளர் Wang Siqi உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இலங்கை அரசின் சார்பில் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

புதியது பழையவை