நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் சேதமடைந்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புதிய பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடமாடும் சேவைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் அவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவாளர் நாயகம் திருமதி சசிதேவி ஜலதீபன் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சுமார் 2.2 மில்லியன் மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தமது முக்கியமான ஆவணங்களை இழந்துள்ளதாக அத்திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.
விசேட ஏற்பாடுகளின் கீழ், நாட்டின் 22 மாவட்டங்களில் பதிவுச் சான்றிதழ்கள் இலவசமாகவும் ஒரு நாள் விரைவு சேவை மூலமாகவும் வழங்கப்படுகின்றன என பதிவாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், நிலச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தின் 'க்ளீன் ஸ்ரீ லங்கா' திட்டத்தின் கீழ் சில பகுதிகளில் நடமாடும் சேவையும் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். சான்றிதழ்கள் வழங்குவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தேவையான ஆதரவை வழங்கி வருவதாகவும், சில சந்தர்ப்பங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுவரை, கொட்டாவ மற்றும் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நடமாடும் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் இல்லாதவர்கள் தொடர்பான தரவுகளை மாவட்ட துணைப் பதிவாளர்கள் தற்போது சேகரித்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் இந்தப் பதிவேடுகளை வழங்கும் பணிகளை நிறைவு செய்ய திணைக்களம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
