சர்ச்சைக்குரிய ஒன்ரேன்செட்ரோன் மருந்து விவகாரம்: விசாரணைகள் ஆரம்பம்

 


சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ஒன்ரேன்செட்ரோன் (Ondansetron) ஊசி மருந்து தொடர்பான விசாரணைகள் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையால் (NMRA) தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய NMRA-யின் தலைவர், விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, இந்த ஊசி மருந்தானது பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) மற்றும் NMRA-யின் இரசாயன ஆய்வகங்களில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், மருந்தை இறக்குமதி செய்த நிறுவனம், வெளிநாட்டிலுள்ள ஒரு ஆய்வகத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இந்தச் சர்ச்சைக்குரிய ஒன்ரேன்செட்ரோன் ஊசி மருந்தை தயாரித்த இந்திய நிறுவனம் உற்பத்தி செய்த அனைத்து வகையான தடுப்பூசிகளையும் நாட்டில் பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த மருந்துப் பயன்பாட்டினால் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டதா என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ஒன்ரேன்செட்ரோன் என்பது பொதுவாக வாந்தி மற்றும் மயக்கம் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்தாகும்.

கடந்த 12ஆம் தேதி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்ட பின்னரே சர்ச்சை வெடித்தது. அதன்பின்னர், அந்த நோயாளியின் இரத்த மாதிரிகளிலும், ஊசி மருந்து மாதிரிகளிலும் நுண்ணுயிரிகள் (Microorganisms) கண்டறியப்பட்டன. இதன் அடிப்படையில், சர்ச்சைக்குரிய ஒன்ரேன்செட்ரோன் மருந்தை பயன்படுத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், தேசிய தொற்றுநோயியல் நிறுவகத்தில் (NIE) உயிரிழந்த இரண்டு நோயாளிகளுக்கு இந்த ஊசி மருந்து வழங்கப்பட்டிருந்ததால், அவர்களது உயிரிழப்புக்கும் மருந்துக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதியது பழையவை