முல்லைத்தீவு சிறுமி டினோஜா மரணம்: நீதியை வலியுறுத்தி மாவட்ட வைத்தியசாலை முன் கவனயீர்ப்பு போராட்டம்

 



முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி டினோஜா உயிரிழந்த சம்பவத்திற்கு நீதியை வலியுறுத்தி, தற்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த போராட்டம் இன்று (29.12.2025) முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்று வருகிறது.

இதன் போது, முல்லைத்தீவு மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரதிகள் சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் நாயகம், சுகாதார பணிமனை, வடமாகாண ஆளுனர் அலுவலகம், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பொலிஸார் உரிய பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா (வயது 12) என்ற சிறுமி, திடீர் சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 21ஆம் திகதி சிகிச்சையின்போது உயிரிழந்தார்.

இந்த மரணம் மருத்துவத் தவறு காரணமாக நிகழ்ந்ததாக சிறுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இத்தகைய சூழ்நிலையிலேயே, சிறுமியின் மரணத்திற்கு நீதியை கோரி இன்று காலை மாவட்ட வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு வணிக நிறுவனங்கள், சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், பொதுமக்களும் தமது ஆதரவை வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனையின் இயல்பான செயற்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்க, பணியில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை