விசேட அனுமதி வழங்கப்படும் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களைத் தவிர, மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எந்த நிலையிலும் இடமளிக்காது என, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
மரக்கறி இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு புதிய தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார். விமான சேவைகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நிறுவனங்களின் தேவைக்காக குளிரூட்டப்பட்ட மரக்கறிகளை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிகளைத் தவிர, பிற எந்தவொரு தரப்பினருக்கும் மரக்கறி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களை அரசாங்கம் தமக்குச் சாதகமாக பயன்படுத்தி மரக்கறிகளை இறக்குமதி செய்ய முனைவதாக தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இக்கருத்துகளை வெளியிட்டார்.
இது தொடர்பாக மேலும் விளக்கம் அளித்த அவர், டித்வா சூறாவளியின் தாக்கத்தால் நாட்டின் வடக்கு முதல் தெற்கு வரை பல விவசாயக் காணிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வயல்கள் உள்ளிட்ட விவசாய நிலங்களில் மீண்டும் பயிர்செய்கை மேற்கொள்ளக்கூடிய நிலை தற்போது உள்ளது என தெரிவித்தார்.
மேலும், நுவரெலியா, கண்டி, பண்டாரவளை, பதுளை, மாத்தளை உள்ளிட்ட பகுதிகளில் தேவையான அளவில் மரக்கறிச் செய்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பண்டிகைக்காலத்தில் ஏற்படக்கூடிய பற்றாக்குறையை காரணமாகக் கொண்டு மரக்கறி இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் அடிப்படையற்றவை எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.