வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இரண்டு பெண் உறுப்பினர்களை நோக்கி, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தாக்கும் போக்கில் நெருங்கிச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கிடைத்த தகவல்களின் படி, சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் இன்று அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குழுத் தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கூட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதன் பின்னர் வெளியே வந்த எம்.பி. அர்ச்சுனா, அங்கு இருந்த இரண்டு பெண் உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, குறித்த உறுப்பினர்கள், “நல்லூரை இடிக்க வேண்டும் என்று நீங்கள் கூறினீர்கள். அதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த எம்.பி., “தையிட்டியில் போராட்டம் நடத்தும் குழு நீங்கள்தான்; இருந்து குழப்பம் செய்யுங்கள்” என்று கூறியதுடன், பெண்கள் என்பதையும் பொருட்படுத்தாமல் அநாகரிகமான சொற்களை பயன்படுத்தி அவர்களைத் திட்டியதாக கூறப்படுகிறது.
அதன்போது, பெண் உறுப்பினர்கள் “சேர், மரியாதையுடன் பேசுங்கள்” என கேட்டுக்கொண்டபோதும், எம்.பி. குரலை உயர்த்தி மிரட்டும் வகையில் அவர்களிடம் நெருங்கிச் சென்றதை காண முடிந்தது. இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் ஐந்திற்கும் மேற்பட்ட பொலிஸார் அங்கு இருந்தபோதும், தலையீடு செய்யாமல் பார்வையாளர்களாக இருந்தமை மேலும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.