இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல தாழமுக்கம், பொத்துவிலில் இருந்து சுமார் 490 கிலோமீற்றர் தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தாழமுக்கம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையின் கிழக்கு கரையை அண்மிக்கக்கூடும் எனவும், அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுப்பெறும் சாத்தியம் இருப்பதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பில், இந்த நிலைமை காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, மொனராகலை, கொழும்பு மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை வேகமாக காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மேலதிக அறிவித்தல் வழங்கப்படும் வரை நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கும், கடற்றொழிலாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை வழியாக காலி வரையிலான கரையோர கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இதனால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.