கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற பாம்புக்கடி சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கல்மடுநகர் பகுதியைச் சேர்ந்த சிறிகாந்தன் கிருசிகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தகவலின்படி, கிளிநொச்சி கல்மடுநகர் பகுதியில் உள்ள ஆலய வளாகத்தில் இன்று நடைபெற்ற சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த போது, குறித்த இளைஞன் திடீரென பாம்புக் கடிக்கு இலக்காகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
