நெடுந்தீவு பகுதியில் பாம்பு தீண்டலுக்கு உள்ளான 33 வயதுடைய பெண்ணொருவர், அவசர சிகிச்சை தேவையால் விமானப்படையின் உதவியுடன் விமானம் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் நேற்று பாம்பு கடிக்கு இலக்காகி, உடனடியாக நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சை அவசியமான நிலையில், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்வழி போக்குவரத்து சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டதால், இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் விமானப்படையின் உதவி பெறப்பட்டு, குறித்த பெண் பலாலி விமான நிலையத்திற்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது குறித்த பெண்ணின் உடல்நிலை சீராகவும், ஆரோக்கியமாகவும் உள்ளது என மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
