கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் விசேட திட்டத்தின் கீழ், 2026 ஜனவரி மாதத்தில் நாடு முழுவதும் உள்ள 44 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இலவச பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக அரசாங்கப் பாடசாலைகள், அரச உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர் பிக்குகள் உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் அடங்குகின்றனர்.
சீன மக்கள் குடியரசின் முழுமையான நன்கொடையாக வழங்கப்பட்ட 11.484 மில்லியன் மீற்றர் சீருடைத் துணிகளை பயன்படுத்தி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்கான அனைத்து துணித் தொகுதிகளும் ஏற்கனவே இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நன்கொடையை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் விழா, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரின் தலைமையில் 2026 ஜனவரி 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மேலும், ஜனவரி 19 ஆம் திகதி முதல் சீருடைத் துணிகளைப் பிரதேச கல்வி அலுவலகங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்னதாகவே மாணவர்கள் சீருடைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.