நாளை இலங்கையை கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – வட, வடகிழக்கில் பலத்த மழையும் 70 கி.மீ வேக காற்றும் எச்சரிக்கை

 


தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (10) மாலை வேளையில் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கிடையிலான இலங்கைக் கடற்கரைப் பகுதியை கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று மாலை வெளியிடப்பட்ட எதிர்வரும் 36 மணி நேர வானிலை முன்னறிவிப்பின் படி, வட மாகாணத்தின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கிழக்கே சுமார் 160 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கு பகுதிகளில் மேகமூட்டமான வானிலை நிலவுவதுடன், வட மாகாணம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதேபோல், வடமேல், மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடையிடையே மழை பெய்யக்கூடும்.

வட மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 50–60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், சில சந்தர்ப்பங்களில் இது 70 கி.மீ வரை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடமேல், மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 40–50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று, மின்னல் தாக்கங்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், கடல் பயணிகள் மற்றும் மீனவ சமூகத்தினர், நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பெய்து வரும் கனமழை காரணமாக கலா ஓயா நீர்ப்பிடிப்பு பகுதியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 4 வான் கதவுகள் தலா 4 அடி மற்றும் 2 வான் கதவுகள் தலா 2 அடி என திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கந்தளாய் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் தொடர்ந்தும் திறந்த நிலையில் உள்ளன.

சீரற்ற வானிலை தொடர்வதை கருத்தில் கொண்டு, 10 வான் கதவுகள் கொண்ட கந்தளாய் நீர்த்தேக்கத்தில் 4 கதவுகளை தலா ஒரு அடி வீதம் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை