அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு – புதிய வீட்டு நிர்மாணத் திட்டம் 9ஆம் திகதி ஆரம்பம்

 

அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்கல் மற்றும் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் அரசின் விசேட திட்டம், எதிர்வரும் 9ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (07) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற 10ஆவது பாராளுமன்றத்தின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசின் செயற்திட்டத்தின் தற்போதைய முன்னேற்ற நிலை, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை ஆகியவை இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.

துல்லியமான தகவல்கள் மற்றும் உண்மையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இழப்பீடு வழங்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் கடன் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வங்கிகளுடன் இணைந்து அந்தக் கடனைப் பெறுவது தொடர்பாக வர்த்தக சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் அனைத்து வர்த்தகங்களையும் பதிவு செய்வதற்கான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையின் தேவை குறித்து குறிப்பிட்ட அவர், அதன் நன்மைகள் குறித்து வர்த்தக சமூகத்தை அறிவுறுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

அண்மைய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட, பதிவு செய்யப்படாத சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, இது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாகவும் செயற்திறனுடன் செலவிடப்பட வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு செய்யாவிட்டால் குறித்த காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியாது என எச்சரித்தார்.

மேலும், அனர்த்தத்துக்குப் பின்னர் மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் போது, முன்பிருந்த நிலையைவிட வாழ்க்கைத் தரம் மேம்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நிதி–திட்டமிடல்–பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

புதியது பழையவை