குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் பெற்றோல் ஊற்றி தனது வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில், குறித்த நபரும் அவரது மகளும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (06) அதிகாலை சுமார் 2.00 மணியளவில், கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரகம் கொலனி – படிகாரமடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்தின் காரணமாக, 43 வயதுடைய தந்தையும், 13 வயதுடைய அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, தீயில் சிக்கிய 36 வயதுடைய மனைவி, 15 வயதுடைய மகள், 20 வயதுடைய மகன், 66 வயதுடைய பாட்டி ஆகியோர் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள், மனைவி மற்றும் மனைவியின் தாய் மட்டுமே இருந்ததாகவும், சம்பவத்தை அறிந்ததும் மகன் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய் மற்றும் சகோதரிகளை காப்பாற்ற முயன்ற போது, 20 வயதுடைய மகனும் தீக்காயங்களுக்கு உள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்தி மனைவியை தாக்கி வந்துள்ளதாகவும், கணவன்–மனைவி இடையிலான தகராறுகள் காரணமாக பல தடவைகள் கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு, இரு தரப்பினருக்கும் முன்னர் எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
