இலங்கையில் டொராண்டோவைச் சேர்ந்த கனேடியப் பிரஜை ஒருவர் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கூலிப்படைத் தாக்குதல் நடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தகவல்களின்படி, குறித்த நபர் கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது, அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகே மர்மக் கும்பல் ஒன்றால் வழிமறிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர், இரும்புத் தடிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தி அவரை கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரம்ப கட்டத்தில் இது வழிப்பறி அல்லது தற்செயலான மோதல் என சந்தேகிக்கப்பட்ட போதிலும், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் என்பது உறுதியாகியுள்ளது.
விசாரணைகளில், தாக்குதலுக்கு உள்ளான நபர் இலங்கைக்கு வருவதை முன்பே அறிந்திருந்த ஒரு கும்பல், அவரை தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும், அவரைத் தாக்குவதற்காக உள்ளூர் கும்பல் ஒன்றிற்கு பெருந்தொகை பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இது ஒரு கூலிப்படைத் தாக்குதல் (Contract Hit) என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் சில உள்ளூர் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான சட்ட மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க கனடா தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.