இந்திய செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், உலகளாவிய அளவில் முன்னணியில் நிலைநிறுத்தப்படுவதை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ‘உலகளாவிய தாக்கம்’ என்ற கருப்பொருளுடன் கூடிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை முன்னிட்டு, இந்திய ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தலைமைத்துவத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில் முனைவோர்களும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய சக்திகளாக இருப்பதாக குறிப்பிட்டார்.
சமூக மாற்றத்தை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்காற்றுவதாகக் கூறிய அவர், ஏஐ உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதன் மூலம் தொழில்நுட்பத் துறையில் உலகளாவிய அளவில் முக்கிய இடத்தைப் பெறுகிறது என தெரிவித்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த இந்தியா தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், புதுமைகளை கண்டறிந்து அவற்றை பெரிய அளவில் செயல்படுத்தும் திறன் நாட்டில் அதிகமாக இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
உலகுக்கு தனித்துவமான ஏஐ மாடல்களை இந்தியா உருவாக்க வேண்டும் என்றும், “உலகிற்காக இந்தியாவில் தயாரித்தல்” என்ற எண்ணம் அதில் பிரதிபலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் அவதார், பார்த்ஜென், ஃப்ராக்டல், கான், ஜென்லூப், இன்டெலிஹெல்த், சர்வம், டெக் மகிந்திரா, ஜென்டீக் உள்ளிட்ட பல முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.