சமூக ஊடகங்களில் இலங்கை பொலிஸார் வெளியிட்டதாகக் குறிப்பிடப்பட்டு பரவும் சில தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கட்டாயமாக அறிந்து கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் எனும் தலைப்பில், உறுதிப்படுத்தப்படாத போலி தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. எனினும், இத்தகவல்கள் இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டவை அல்ல என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை பொலிஸாரால் வெளியிடப்படும் அனைத்து உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் இலங்கை பொலிஸின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மற்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கைகள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், சமூக ஊடகங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.