இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் இரண்டு அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகளுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகநபருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, திறந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசித்துக் காட்டப்பட்டது.
இதன்போது, தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த பிரதிவாதி, தாம் “குற்றவாளி அல்ல” என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
