இரணைமடு கமக்கார அமைப்புகளில் நிதி முறைகேடு? – தேசிய கணக்காய்வு திணைக்களத்தின் திடீர் சோதனை

 

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம் மற்றும் கிளிநொச்சி கமநல சேவையின் கீழ் இயங்கும் மகிழங்காடு கமக்கார அமைப்பு ஆகியவற்றின் நிதி நிர்வாகம் தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த முறைகேடுகள் குறித்து, தேசிய கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டபோது பல தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பாசனத் திட்டமான இரணைமடு குளத்தின் கீழ் பயிரிடும் விவசாயிகளிடமிருந்து, 2013 ஆம் ஆண்டு முதல் இதுவரை அறவிடப்பட்ட பெருந்தொகையான நிதிகள்,

உரிய கணக்கு முறைகளில் பதிவு செய்யப்படாமலும், வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படாமலும், கூட்டத் தீர்மானங்கள் இன்றியும், தன்னிச்சையாக செலவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், கிளிநொச்சி கமநல சேவை நிலையம், மகிழங்காடு கமக்கார அமைப்பின் ஊடாக முறைகேடான முறையில் மானிய உரம் பெற்றுக் கொண்டமை, அதற்கான நிதி பரிவர்த்தனைகள் தொடர்பிலும் பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் (08.01.2026) கிளிநொச்சிக்கு வருகை தந்த தேசிய கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள், இரத்தினபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக, இரணைமடு திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பற்றுச்சீட்டு புத்தகங்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதேபோல், உர விநியோகத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, கிளிநொச்சி கமநல சேவை நிலையம் மற்றும் மகிழங்காடு கமக்கார அமைப்பில் இருந்த ஆவணங்களும் மேலதிக ஆய்விற்காகப் பெற்றுச் செல்லப்பட்டுள்ளன.

நேற்று காலை 10.00 மணி முதல் மாலை 5.15 மணி வரை, இந்த விசாரணைகள் இரத்தினபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, சம்மேளனத்தின் காசோலைகள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் அதன் பொருளாளரால் இதுவரை ஒப்படைக்கப்படாததுடன், அவர் விசாரணைகளுக்கும் சமூகமளிக்கவில்லை என கூறப்படுகிறது.

விவசாய அமைப்புகள் மற்றும் கமநல சேவை நிலையங்கள் தொடர்பாக தேசிய கணக்காய்வு திணைக்களம் மேற்கொள்ளும் முதலாவது விசாரணை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை